×

ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, பொருளாதார மந்த நிலை, மூலப்பொருள் விலை உயர்வு: இளநீர், டீ, வடை விற்பனைக்கு மாறும் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள்

கோவை, ஏப். 11: ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, பொருளாதார மந்த நிலை, மூலப்பொருள் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. பல்வேறு சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் இளநீர் வியாபாரம், டீ, போண்டா, வடை விற்பனை போன்ற தொழில்களுக்கு மாறி வருவதாக தொழில் முனைவோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன.

இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி இருந்தன. அதற்கு பின்பு மெல்ல மெல்ல எழ துவங்கின. ஆனால் மூலப்பொருட்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு, ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, வங்கி கடன் கெடுபிடி, உற்பத்தி பொருட்கள் விற்பனை சந்தையில் மந்த நிலை, போதுமான ஆர்டர்கள் கிடைக்காதது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு போதுமான நிதி இல்லாத காரணத்தால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர். இது குறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க (கோப்மா) தலைவர் மணிராஜ் கூறியதாவது: கோவையில் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள், தயாரிக்கும் நிறுவனங்கள் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனையாகின்றன. பம்புசெட் உற்பத்தியில் இந்தியாவிற்கே சிறந்த மார்க்கெட்டாக கோவை உள்ளது.

சுமார் 70 ஆண்டு கால பாரம்பரியமும் கோவையில் உள்ள பம்புசெட் நிறுவனங்களுக்கு உள்ளது. உலக அளவில் கோவை பம்பு செட்கள் பெயர் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்தில் மட்டும் பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பில் பெரிய நிறுவனங்கள் சுமார் 3 ஆயிரம் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் உள்ளன. இதில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். கொரோனா பாதிப்பை காட்டிலும் மூலப்பொருள் விலை ஏற்றம், அதிகாரிகள் கெடுபிடிகள் போன்றவற்றால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடன் தொல்லையால் வங்கிகளுக்கு பயப்பட வேண்டிய நிலை, ஜிஎஸ்டி அபராதம் என தற்போது தொழில் முனைவோர்கள் அவதியடைந்து வருகின்றனர். வழக்கமாக கோடை காலங்களில் பம்புசெட் விற்பனை என்பது தினமும் 25 ஆயிரம் வரை இருந்தது. ஆனால் தற்போது 5 ஆயிரமாக குறைந்துள்ளது.

பம்புசெட் சிறு நிறுவனங்களை பொறுத்தவரையில் 40 சதவீதம் பேர் தொழில் நிறுவனங்களை மூடம் நிலையில் உள்ளனர். பல சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் இளநீர் வியாபாரம், டீ போண்டா, வடை விற்பனை, வாடகை ஆட்டோ ஒட்டுநர் போன்ற தொழில்களுக்கு மாறிவிட்டனர். இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் குறுந்தொழில் முனைவோர்கள் 90 சதவீதம் பேர் தொழிலை மூடி இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு, சிறு குறைகளுக்கு கூட லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பதால் தொழில் முனைவோர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்து தொடர்ந்து தொழில் துறையினர் ஒன்றிய அரசிடம் எடுத்துக் கூறியும் எவ்விதமான நடவடிக்கை இல்லை. இதனால் குறு, சிறு தொழில்கள் முடங்கி வருகின்றன.

இப்பொழுது புதிய பிரச்சினையாக தமிழகத்தை சார்ந்த அதிகாரிகள் ஜிஎஸ்டி பில்லில் உள்ள சிறு, சிறு குறைகளை கண்டறிவதும் அதற்காக பல லட்சங்கள் அபராத விதிப்பதும் தொழில் துறையில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அருகாமையில் இருக்கக்கூடிய எடை மெஷின் வெயிட் பார்த்து பில் போடுவதாக சென்றால் கூட இவே பில் போடவில்லை என்று சொல்லி அபராத விதிப்பதும், பில்லில் ஏற்படுகின்ற சின்ன சின்ன எழுத்து பிழைக்கும் கூட அபராத விதிப்பதும், கம்பெனி பகுதியில் அதிகாரிகள் வட்டம் இடுவதும் வாகனங்களை மறித்து அபராதம் விதிப்பு என்று தொடர்ந்து தொழில்களை முடக்கி வருகின்றார்கள்.

தமிழகத்தில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கை திட்டமிட்டு குறு, சிறு தொழில்களை முறையாக தொழில் செய்து வருகின்ற உற்பத்தி துறை முடக்குவதற்காக நடைபெறுகின்றன. கோவை மாவட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் எண்ணற்ற வடமாநில பொருள்கள் பில் இல்லாமல் விற்பனை செய்வதும், கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி பில் போடாமல் விற்பனை செய்வதும் நடக்கின்றது. அதையெல்லாம் பிடிப்பதற்கு தவறி விட்டு முறையாக தொழில் செய்து கொண்டிருக்கின்ற உற்பத்தி துறைக்கு நெருக்கடி கொடுப்பது என்பது கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஜிஎஸ்டி அதிகாரிகள் கிடுக்குப்பிடி, பொருளாதார மந்த நிலை, மூலப்பொருள் விலை உயர்வு: இளநீர், டீ, வடை விற்பனைக்கு மாறும் சிறு, குறுந்தொழில் முனைவோர்கள் appeared first on Dinakaran.

Tags : Govina ,GST ,
× RELATED கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் ரூ2.1 லட்சம் கோடி